சிவகங்கை: பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் ஆய்வு

சிவகங்கை நகராட்சியில் ரங்கநாச்சியார் பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்படும் விரிவாக்க பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆய்வு செய்தார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி (2024-25) ரூ. 1 கோடி, மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1 கோடி என சிவகங்கை பேருந்து நிலையத்தை விரிவாக்க பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ல் விரிவாக்கப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், பேருந்து நிலைய விரிவாக்கப்பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற புகார் எழுந்தது. இது குறித்து தகவலறிந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை நகராட்சி ராணி ரெங்கநாச்சியார் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினார். இதில், காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ். மாங்குடி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஞ்சய்காந்த், நகர்காங்கிரஸ் தலைவர், நகர்மன்ற உறுப்பினர் தி. விஜயகுமார் வட்டாரத் தலைவர் உடையார், நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மோகன்ராஜ், நிர்வாகிகள் ஸ்ரீவித்யாகணபதி, லெட்சுமணன், ஆறுமுகராஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி