சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொதுச்செயலர் கே. ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும்.
1.4.2003-க்கு முன்பு பணியில் சேர்ந்து, பின்னர் பணி நிரந்தரம் பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் கொசுஒழிப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கெனத் தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும். நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஊதியவிகிதம் நிர்ணயிக்க வேண்டும். மக்கள் விரும்பும் பொருட்களை மட்டுமே கேட்டறிந்து வழங்கி, கடத்தலைத் தடுத்து நிறுத்தி மக்கள் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.