சிவகங்கை: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மாணவர்கள் பேச்சுப் போட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் மை பாரத் நேரு யுகேந்திரா இணைந்து "வளர்ச்சியடைந்த இளையோர் பாராளுமன்றம்" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 

இதில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையின் நன்மைகள், செலவினக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரச் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். நிகழ்வை மாவட்ட இளைஞர் அலுவலர் பிரவீன் குமார் தொடங்கி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தனியார் கல்லூரித் தலைமைச் செயலாளர் ராமேஸ்வரன் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். மொத்தம் 105 பேர் போட்டியில் பதிவு செய்திருந்த நிலையில், 50 பேர் தேர்வாகி இறுதிச் சுற்றில் பேசினர். இதில் வெற்றி பெற்ற 10 பேருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த 10 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அடுத்த கட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி