சிவகங்கை: பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள சுண்ணாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்தப் பெண்ணுக்கு எட்டு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அந்தப் பெண் கணவரை விட்டு பிரிந்து அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். 

அப்போது அவர் மன நிம்மதிக்காக காளையார் கோவில் அருகே உள்ள ஒரு பிரார்த்தனை தோட்டத்திற்கு சென்று பிரார்த்தனை செய்து வந்தார். அங்கு பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த மகேஷ் (36) என்பவர் அந்தப் பெண்ணிடம் ஆறுதலாகப் பேசி அவருடன் பழகினாராம். அத்துடன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தாராம். இதையடுத்து அப்பெண்ணும் மகேஷூம் நெருங்கி பழகியுள்ளனர்.

இந்த நிலையில் கர்ப்பமான அந்தப் பெண்ணுக்கு கடந்த மே மாதம் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாம்.  தொடர்ந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மகேஷ் மறுத்தாராம். இதுக்குத் தொடர்ந்து அந்தப் பெண் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினாராம். 

அப்போது அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணை மிரட்டினார்களாம். இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விசாரணை நடத்தி மகேஷை கைது செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி