புத்தாண்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா ஆகியோர் மேற்பார்வையில் 10 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 150 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதே போன்று போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின் பேரில் 40 இன்ஸ்பெக்டர்கள், 200-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் விடிய, விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என்பது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஐந்து ரோடு பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.