சங்ககிரி: சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கருப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் தறி தொழிலாளி. இவர் நேற்று மாலை சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் கிராமம் சாய்புகாடு என்ற இடத்தில் உள்ள பாறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் ஜெயராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜெயராஜ்க்கு திருமணமாகி ஜமுனா என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் ஜெயராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 9 லட்சத்தை இழந்துள்ளார். அந்த கடனை பெண்வீட்டார் அடைத்தனர். அதனை தொடர்ந்து மனைவிக்கு தெரியாமல் மீண்டும் ஜெயராஜ்க்கு ரூபாய் 2 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜெயராஜ் பழுதுபார்க்க வைத்த இருசக்கர வாகனத்தை எடுத்து வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயராஜ் தேவன்னகவுண்டனூர் சாய்புகாடு பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி