சேலம்: இளம்பெண் சாவில் சந்தேகம்.. கணவர்- மாமியாரிடம் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இ. காட்டூர் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ராஜன் (வயது 30). இவர், எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், காகாபாளையம் அருகே ராக்கிபட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகள் சுந்தரி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். 

நேற்று அதிகாலை சுந்தரி, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சுந்தரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்த சுந்தரியின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். 

பின்னர் போலீசார் சுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுந்தரியின் தாயார் பெருமாயி மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் சுந்தரி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் சுந்தரியின் கணவர் ராஜன், மாமியார் சின்னப்பிள்ளை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி