சேலம்: அகில இந்திய அளவில் வணிகர்கள் போராட்டம் நடத்த முடிவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ஆம் தேதி மதுரையில் வணிகர் மாநாடு நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். கட்டிட வரி, குப்பை வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே, இந்த மாநாட்டில் வணிகர்களின் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அமேசான் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளால் 20 சதவீதம் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தங்களது கடைகளை மூடியுள்ளனர். வணிகர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்க தவறினால் அகில இந்திய அளவில் வணிகர்கள் போராட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளோம். தமிழக அரசின் பட்ஜெட்டில் வணிகர்களுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பட்ஜெட் வியாபாரிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

தொடர்புடைய செய்தி