சேலம்: கிணற்றில் மூழ்கி இறந்த முதியவர்; பரபரப்பு

சேலம் வீராணம் அருகே உள்ள சின்னனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 75). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரில் முதியவர் தனது பேரன், பேத்திகளுக்கு நேற்று மதியம் நீச்சல் பழகி கொடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து உறவினர்கள் கிணற்றில் இறங்கி முதியவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. 

பின்னர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி முதியவரை தேடினர். அப்போது முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு முதியவர் சுந்தரத்தின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீராணம் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி