சேலம்: பட்டாசு வெடிக்காமல் மாசில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

சேலம் மாநகராட்சி 34-வது வார்டில் இருக்கும் அய்யாசாமி பசுமை பூங்காவில் உள்ள மரங்களில் பல்லாயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க பூங்கா உள்ள வள்ளி நகர், பாலாஜி நகர் பகுதிகளில் ெபாதுமக்கள் அதிக வெடிச்சத்தம் மற்றும் புகை மூட்டத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். மேலும் வெடிகளால் ஏற்படும் அதிர்வுகளை தவிர்த்து, அங்கு வாழும் வவ்வால்களுக்கு தீங்கு ஏற்படுத்தாமல், அவை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்திடா வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

மேலும் 34-வது வார்டு முழுவதும் ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தாத மாசில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்களிடம் வார்டு கவுன்சிலர் ஈசன் இளங்கோ துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 1, 200 கொடிய நோய்களை பரப்பும் கொசுக்களை உண்டு, அவற்றை அழிக்கும் வல்லமை பெற்றவை. வவ்வால்கள் ஒவ்வொரு நாளும் தனது உடல் எடைக்கு நிகரான உணவை உண்டு செரிக்கிறது.

அவை தீவிரமாக பூச்சிகளை சாப்பிடுவதால்தான் உலகில் பூச்சியினங்களின் அபரிமிதமான பெருக்கம் ரசாயன மருந்துகளின்றி கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் வவ்வால்கள் பழங்கள், பூக்கள், தளிர்கள் போன்றவற்றை தின்பதன் மூலம் விதைப்பரவல், மகரந்த சேர்க்கைக்கு பெரும் பங்காற்றுகின்றன. எனவே வவ்வால்களை நாம் காப்போம் என்று கூறி அவர் பிரசாரம் செய்தார்.

தொடர்புடைய செய்தி