காப்பீட்டு நிறுவன பெண் மேலாளரிடம் ரூ. 3¼ கோடி மோசடி: 3 பேர் கைது

சேலம் அஸ்தம்பட்டி, அடைக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா. காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி நான் பணியில் இருந்தேன். அப்போது தலைவாசலை சேர்ந்த உதயசங்கர், அவருடைய மனைவி சாந்திதேவி, தம்பி ராஜசேகர் ஆகிய 3 பேர் என்னிடம் நாங்கள் 3 பேரும் ஆன்லைன் மூலம் கோல்டு பிசினஸ் செய்து வருகிறோம். அதில் அதிக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தங்கமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 3 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 78-ஐ அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தேன். பின்னர் சில மாதங்களில் ரூ. 8 லட்சத்து 87 ஆயிரம், 24 கிராம் தங்கம் பெற்றேன். அதன்பிறகு அவர்கள் பணம் தரவில்லை. இது குறித்து கேட்டபோது அவர்கள் தங்கள் நிறுவனத்தை மூடிவிட்டோம். பணம் தர முடியாது என்று கூறி வருகின்றனர். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த உதயசங்கர் (வயது 48), அவருடைய மனைவி சாந்திதேவி (43), தம்பி ராஜசேகர் (45) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி