சேலம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த கண்ணன் மகன் ஜீவா (வயது 18), வெங்கடேஷ் மகன் சஞ்சய் பாலா (19). பெயிண்டரான இவர்கள் இருவரும் மேட்டூருக்கு நேற்று வேலைக்கு வந்தனர்.வேலை முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் விராலி காடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதாக தெரிகிறது.இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 2 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களது உடல்களை பார்த்து அவர்கள் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினிவேன் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு சென்றது தெரிய வந்தது. வேனை ஓட்டி வந்த அகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.