சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலைய பகுதி அருகாமையில் ஸ்வேதா நதி மேம்பாலம் அமைக்கப்பட்டது. நேற்று மாலை திடீரென பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த தேனீக்கள் அவ்வழியாகச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் ஓட்டிகளை கொட்டியது. இதில் அப்பகுதியினர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் தேனீக்கள் கொட்டியதால் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌரி (34), ரஞ்சித் குமார் (28), மணி (25), விஜயகுமார் (42), அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்து, மணிகண்டன் (14), ஆகாஷ் ராஜா (14), ஸ்ரீராம் (17), நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த முல்லை பிரசாந்த், உலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (31) உள்ளிட்ட 10 பேர் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று சென்றனர். மேலும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஸ்வேதா நதிக்கரை பாலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள தேனீக்கள் கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தம்மம்பட்டி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.