ஆத்தூர் கார் மரத்தில் மோதி கணவன் கண் முன்னே மனைவி பலி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி சாஹிரா பானு (45) இவர்களுக்கு ரோஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நசீரின் மனைவி சாஹிரா பானுவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டயாலிசிஸ் செய்ய சேலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் காரில் சென்றுகொண்டிருந்தனர். 

ஆம்புலன்ஸ் காரை கணவர் நசீர் ஓட்டிச்சென்றார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மஞ்சினி செல்லும் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டனர். கணவர் நசீர் அடிப்பட்டு உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், உயிரிழந்த சாஹிரா பானு உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி