எடப்பாடி: சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை அகற்றிய அரசு டாக்டர்கள்

எடப்பாடி நகராட்சி வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவருடைய மகன் திலகர் (வயது 4). கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன் திலகர், கடந்த 14-ம் தேதி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சையில் இருந்த சிறுவனிடம் அவனைப் பார்க்க வந்த உறவினர்கள் சில்லறை காசுகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதில் தவறுதலாக சிறுவன் ஒரு 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி உள்ளார். நாணயம் தொண்டையில் சிக்கிக்கொண்ட நிலையில் சிறுவன் வலி தாங்காமல் அழுதுதுடித்ததைக் கண்ட அவனது பெற்றோர், இதுகுறித்து அரசு டாக்டர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். 

அங்குப் பணியில் இருந்த அரசு தலைமை டாக்டர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட சிறுவனுக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு நாணயம் தொண்டையில் சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து நவீன சிகிச்சை முறைகளின் மூலம் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவக்குழுவினர் அகற்றினர்.

தொடர்புடைய செய்தி