சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (53). அ.தி.மு.க. சேர்ந்த இவர் முன்னாள் நரசிங்கபுரம் நகர மன்றத் தலைவராக இருந்தார். இவர் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பழ வியாபாரி கணேசன் (55) என்பவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஸ்ரீராம் குடும்பப் பிரச்சினை தொடர்பாக பேசிய போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், ஸ்ரீராமின் கழுத்தில் கத்தியால் குத்த முயன்றபோது அவரது தலைப்பகுதியில் கத்தி குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் கணேசன் தலைமறைவானார். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேசனை ஆத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.