ஆத்தூர்: கோயில் பூட்டை உடைத்து உண்டியலில் திருடும் சிசிடிவி காட்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட முல்லைவாடி 3வது வார்டு நாராயணபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமாள் கோவிலில் கடந்த 19ஆம் தேதி மாலை வழக்கம்போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச் சென்றார். மீண்டும் காலை பூஜை செய்ய வந்த பூசாரி கோவில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நகரப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கோவிலின் கேட்டைக் கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று உண்டியலைத் திருடிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கோவிலின் உண்டியலைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி