தைப்பூச விழாவினையொட்டி நாகநாதசுவாமி, சவுந்திரவள்ளி அம்பாள் ஆகியோர் பூ பல்லக்கில் ஊர்வலமாக மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. மஞ்சக்கொல்லை கிராமத்தில் வைகை ஆற்றில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, தீபாராதனைகளும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமிகள் குதிரை, காளை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் சென்று தீர்த்தவாரி குளத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அப்போது திருவிழாவில் கிராம பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறி மற்றும் பழங்களை சுவாமி மீது சூறையிட்டு வழிபட்டனர். சொந்த நிலங்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல விளைச்சல் அடைய வேண்டும் என்பதற்காக இந்த திருவிழாவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சுவாமி மீது சூறை வீசுவதும், சூறை வீசிய காய்கறிகளை எடுத்து சென்று மீண்டும் விவசாயம் செய்தால் நன்கு விளைச்சல் இருக்கும் என்பது தீர்த்தவாரி வைபவத்தின் சிறப்பு அம்சமாகும்.