சிவகங்கை: இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை; கும்பல் வெறிச்செயல்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (29). சம்பவத்தன்று இவர் தன்னுடைய உறவினரான சிவசங்கர் (28) என்பவருடன் அருகிலுள்ள இருப்பான்பூச்சி என்ற இடம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்துபேர் கொண்ட கும்பல் ஒன்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சரத்குமார் அதே இடத்தில் இறந்துபோனார். 

சிவசங்கர் பலத்த காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதைத்தொடர்ந்து சிவசங்கரை சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுசம்பந்தமாக காளையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபு, விக்ரம், ஜனா மற்றும் சிவா ஆகிய நான்குபேர்களை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தநிலையில் இந்தவழக்கில் போலீசார் தேடிய இளையான்குடி கற்பகநகரைச் சேர்ந்த வசந்தகுமார் (27) என்பவர் சிவகங்கை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இந்தவழக்குதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி