ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த காலணி உதிரிப் பாகங்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம், வேதாரை, சீனியப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் போலீசார் ரகசியக் கண்காணிப்பில் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டனர். 

அப்போது, சீனியப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் மூன்று சாக்கு மூட்டைகளை இருவர் படகில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அந்த மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர். பின்னர், போலீசார் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது, காலணி உதிரிப் பாகங்கள் இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காலணி உதிரிப் பாகங்கள் மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி