பரமக்குடி: ஸ்ரீமுத்தாலம்மன் ஆலய பூச்சொரிதல் விழா; பூத்தட்டுகளை ஏந்தி வந்த இஸ்லாமியர்கள்

பரமக்குடி நகரின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 69வது ஆண்டு பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு நகரின் 58 இடங்களில் பொதுமக்கள் சமுதாய அமைப்பினர் சார்பில் மல்லிகை, ரோஜா, தாமரை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பூக்களை தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள், மேளதாள கரகாட்டம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

ஏராளமான பொதுமக்கள் மேளதாளத்துடன் ஸ்ரீ முத்தாலம்மன் பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நகர் முழுவதும் ஊர்வலமாக பூத்தட்டுகளை எடுத்துச்சென்று அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர் அமைப்பைச் சேர்ந்த தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளையினர், எமனேஸ்வரம் இஸ்லாமிய இளைஞர்கள் ஸ்ரீமுத்தாலம்மனுக்கு பூத்தட்டுகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். 

இந்நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. மேலும் இஸ்லாமியர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி