விருதுநகர் மாவட்டம், தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த கோனேரி மகன் கருப்பையா இவர் ஆம்னி வேனில் வெளியூர்களுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி புறவழிச் சாலை வழியாக தும்முசின்னம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனைமேடு நான்குமுனை சந்திப்பில், செங்கப்படையில் மாணவர்களை இறக்கிவிட்டு, கமுதி நோக்கி வந்த தனியார் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஜவுளி வியாபாரி கருப்பையா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதனிடையே, கமுதி- முதுகுளத்தூர் புறவழிச் சாலையில், அரண்மனைமேடு, பாப்பாங்குளம் விலக்கு, உலகநடை விலக்கு, வழிவிட்டஅய்யனார் கோயில் விலக்கு ஆகியவை சந்திக்கும் பகுதியில் வேகத் தடை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்