மொபட் தீப்பிடித்து எரிந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

பொன்னமராவதி சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பூஞ்சோலை. இவர் தனது மகள் ரஞ்சிதா (18), மகன் ராஜூ (9) ஆகியோருடன் நேற்று முன்தினம்  (ஏப்ரல் 1) இரவு மொபட்டில் பொன்னமராவதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். 

கேசராபட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென மொபட்டின் முன்பகுதியில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த பூஞ்சோலை, ரஞ்சிதா இருவரும் மொபட்டை விட்டு கீழே குதித்தனர். அவர்கள் லேசான காயமடைந்தனர். மொபட் கீழே விழுந்ததில் சிறுவன் ராஜூ சிக்கிக்கொண்டான். தீ வேகமாக பற்றி உடல் மீது பரவியதால் கூச்சலிட்டான். 

அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டனர். 3 பேரும் பொன்னமராவதி வலையப்பட்டி அரசு பாப்பாயி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த ராஜூ ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை ராஜூ உயிரிழந்தான். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தொடர்புடைய செய்தி