மழையூர் டாஸ்மார்க் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகேஷ் (25) என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே இருசக்கர வாகனத்தில் நின்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் முருகேசன் படுகாயமடைந்த நிலையில் மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து அவரது உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முருகேசனை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முருகேசன் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என 500 க்கும் மேற்பட்டோர் மழையூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என குற்றம் சாட்டி, பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். மேலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி