பெரம்பலூர்: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் பொதுமக்கள் குடிப்பதற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த குடிநீர் கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் முறையாக கொள்ளிடம் குடிநீர் வழங்க கோரி இன்று நாரணமங்கலம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்ததோடு ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி