இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்வதால் இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், கோடை சீசனில் நிலவக்கூடிய இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கிய நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் பிரமாண்டமாக நடைபெற்றன.
இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உதகையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு மற்றும் கோடை சீசன் நிறைவு பெற்றதையொட்டி ஞாயிறு விடுமுறை தினமான இன்று உலகப் புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை சற்று கணிசமாக குறைந்து காணப்பட்டது.