நீலகிரி: 18ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலகொம்பை அருகே நெடுங்கல் கொம்பை என்னும் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக கூறி மாவோயிஸ்ட் டேனிஷ் ஸ்டாலின், ஷோபா, சுந்தரி, சாவித்திரி, சந்தோஷ் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த இந்த ஐந்து பேரும் கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட காவல் நிலையங்களில் சரண் அடைந்தனர். 

இவ்வழக்கில் தொடர்புடைய பெங்களூர் சிறையிலிருந்து கடந்த வாரம் மாவோயிஸ்ட் சுந்தரி உதகை குடும்ப நல நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு 16ம் தேதி வரை நீலகிரி மாவட்ட காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளா மாநிலம் திருச்சூர் சிறையில் உள்ள சந்தோஷ் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கினை விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி முரளிதரன் மாவோயிஸ்ட் சந்தோஷை 18ம் தேதி வரை மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது குற்றவாளியான சந்தோஷை கேரளா மாநிலம் திருச்சூருக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி