கோவை: சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை பலி

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பகுகுல் ஷேக்(20). இவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது பெண் குழந்தை பாத்திமா ஆகியாருடன் கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார். அங்குள்ள மாட்டுப்பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி பாத்திமா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பாத்திமாவுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் குழந்தை கதறி துடித்தது. சத்தம்கேட்டு வெளியே வந்த பெற்றோர் குழந்தையை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி