உதகை: புதர்மண்டி கிடக்கும் பொது மயானம்

கோத்தகிரி பகுதி கடைவீதி அருகே பேரூராட்சிக்கு சொந்தமான பொது மயானம் உள்ளது. இந்த மயானத்தில் அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மயானத்தில் உள்ள செடி-கொடிகள் நன்கு வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதாவது மயான பாதையை தவிர மற்ற பகுதிகள் முழுவதும் தெரியாத அளவுக்கு செடி-கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. 

இதனால் மயானத்தில் விஷ ஜந்துக்கள், தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அத்துடன் மயானத்தில் சிமெண்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதுடன் அதில் மழை பெய்து சேறும், சகதியாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மயானத்திற்கு வருபவர்கள் சேறும், சகதியுமான நடைபாதையில் வழுக்கி விழுவது, புதர் மறைவில் இருந்து வரும் விஷ ஜந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாவது உள்ளிட்ட சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

எனவே, பேரூராட்சி நிர்வாகம் மயானத்தில் புதர் மண்டி கிடக்கும் செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும். சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி