நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் தங்கும் விடுதி, சுற்றுலா வாகனம், உணவகம், விவசாயம், ஆட்டோ ஓட்டுனர் என மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சங்கத்தினர்: இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 6000 சுற்றுலா வாகனங்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்களும் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகனக் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 29ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடிப் போராட்டமும், ஏப்ரல் 2ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏப்ரல் 2ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகள் யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.