மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்டுள்ள மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு, பெரியார் நகர் பகுதியில் இரண்டாவது நாளாக ஒற்றை பெரிய கரடி தொடர்ந்து ஒரே பகுதியில் உலா வந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒருவரின் வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சியை கண்ட பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கரடியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.