பொதுவாகவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படும் நிலையில் பனியின் தாக்கத்தால் தோட்டத்தில் உள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும். அதன் பின்னர் உள்ளூர் விவசாயிகளுக்கும் தேயிலைத் தொழிலை நம்பி உள்ள பணியாளர்களுக்கும் பணிகள் ஏதும் இன்றி வீடுகளில் முடங்கும் நிலை ஏற்படும். சமீப தினங்களாக பொழிந்து வரும் மழையின் காரணமாக தேயிலைத் தோட்டங்களில் பசுமை திரும்பி உள்ளது. இதனால் உள்ளூர் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலைப் பணிகளுக்குச் செல்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை பொழியும் நாட்களில் மழை பொழிவிற்குப் பிறகு எருவுரமிட்டு அதன் மீது மழை பொழிந்தால் தேயிலைத் தோட்டங்களில் இலைகள் சிறப்பாக வளரும். அதன் பின்னர் பசுமையான தேயிலை இலைகளால் மக்களின் வாழ்க்கையும் பசுமையாக இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் சிறந்த மகசூல் இருந்தும் சொல்லும் அளவிற்கு விலை போகாமல் உள்ளதால் தேயிலை விவசாயத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 20 க்கும் மேல் விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.