திருச்செங்கோடு: மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற நபா் கைது

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் எஸ் 9 என்ற நகரப் பேருந்தை ஜனவரி 1ஆம் தேதி இரவு ஓட்டுநர் பச்சமுத்து நிறுத்திவிட்டு உணவருந்த சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பேருந்து இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பச்சமுத்து, இதுகுறித்து போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். 

தொடர்ந்து இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சங்ககிரி அருகே உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு அருகே பேருந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்த போது மது போதையில் ஒருவர் பேருந்தில் படுத்திருந்தார். 

பேருந்தையும், அந்த நபரையும் மீட்ட போலீசார், திருச்செங்கோட்டுக்கு கொண்டு வந்தனர். திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றதாக தெரியவந்தது. 

மேலும் விசாரணையில், அவர் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பதும், திருச்செங்கோட்டுக்கு ரிக் வேலை கேட்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகம் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி