நாமக்கல்: யோசிக்காமல் பெண் போலீஸ் செய்த செயல்

நாமக்கல்லில் ஆறரை சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாமக்கல் ராசிபுரம் காவல்நிலைய தலைமை காவலர் செல்வி, அரசு மருத்துவமனை அருகே கைப்பை ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். அதில் ஆறரை சவரன் தங்க சங்கிலி இருந்த நிலையில், அதை ராசிபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். 

பின்னர் அந்த நகை ராசிபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த சித்ரா என்பவருடையது என தெரிய வந்த நிலையில், சித்ராவிடம் அந்த நகை ஒப்படைக்கப்பட்டது. உதவி ஆய்வாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார் சித்ரா. சித்ரா தனது நகை கிடைத்த மகிழ்ச்சியில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கேக் வழங்கி மகிழ்ந்தார். தலைமை காவலர் செல்வியின் செயலை பாராட்டி ராசிபுரம் காவல்துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி