நாமக்கல்: விபத்தில் தனியார் நூற்பாலை காவலாளி பலி

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரை சேர்ந்தவர் சரவணன். இவர் பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சொந்த வேலை காரணமாக சரவணன் மோட்டார் சைக்கிளில் பரமத்தி வேலூருக்கு வந்தார். பின்னர் மீண்டும் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது பரமத்தி அருகே தனியார் கல்லூரி எதிரில் உள்ள பிரிவு சாலையில் முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியது. அப்போது சரவணன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி லாரியின் பின்னால் மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

படுகாயம் அடைந்த சரவணனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி