நாமக்கல்: ஆறு மாத குழந்தையுடன் குண்டத்தில் தவறி விழுந்த பக்தரால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்ற ஒரு நிலையில் இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகப் பகுதியில் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. 

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிறுவர், சிறுமியர், இளம் பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தீ மிதி திருவிழாவில் பங்கேற்று தீ மிதித்த நிலையில் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த குமார் என்ற பக்தர் தனது ஆறு மாத பெண் குழந்தையுடன் தீ மிதிப்பதற்காக வந்தார். 

அப்போது அக்னி குண்டத்தில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டத்தில் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் கால் தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சுற்றுவட்டார பொதுமக்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இதனையடுத்து அங்கிருந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக குழந்தையையும், பக்தர் குமாரையும் பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

மேலும் அக்னி குண்டத்தின் வெளியே விழுந்ததால் இருவரும் பாதிக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக கோவில் வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி