நல்லூர்: மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது

நல்லூர் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாப்பா (80). இவர், பாமாகவுண்டம்பாளையம் நான்கு சாலை அருகே புதன்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மூதாட்டி பாப்பாவின் காதில் அணிந்திருந்த தங்க தோட்டையை பறித்துச் சென்றனர். 

இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் தங்க தோட்டையை பறித்துச் சென்ற நபர்களைத் தேடிவந்தனர். பரமத்தி காவல் ஆய்வாளர் இந்திராணி, நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கங்காதரன் ஆகியோர் நல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த இரு நபர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் நல்லூரில் காளியப்பனூரைச் சேர்ந்த துரைசாமி மகன் தினேஷ் (21), பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த குமார் மகன் ஹரிஷ் (20) என்பதும் இருவரும் மூதாட்டியிடம் நகையைப் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி