சீர்காழி: மண்டல துணை வட்டாட்சியர் உள்பட இருவர் கைது

சீர்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியைச் சேர்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டர் (59). குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972-இல் அரசு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னர் மனைவி ஜெயலட்சுமிக்குப் பட்டா மாற்றப்பட்டது. அந்த இடத்தை வைத்து வங்கிக் கடன் வாங்க அலெக்சாண்டர் முயற்சித்தார். அந்த நிலம் நத்தம் பட்டா கணினி பதிவேற்றம் செய்யப்படவில்லை என வங்கியில் தெரிவித்தனராம். 

இதற்காக அலெக்ஸாண்டர் சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் தேவகியிடம் மனு அளித்தார். கணினியில் பதிவேற்ற தேவகி ரூ. 15,000 லஞ்சம் கேட்டு இறுதியில் ரூ. 10,000 கேட்டாராம். அலெக்சாண்டர் மயிலாடுதுறை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், காவல் ஆய்வாளர் அருள்பிரியா ஆகியோர் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய ரூபாயைக் கொடுத்து அனுப்பி உள்ளனர். 

மண்டல துணை வட்டாட்சியர் தேவகியிடம் பணத்தைக் கொடுக்க முயன்றார். அதை தற்காலிக கணினி பணியாளர் டெல்பியிடம் (29) கொடுக்க தேவகி கூறினாராம். டெல்பி பணத்தை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தபோது லஞ்ச ஒழிப்புப் போலீசார் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து மண்டல துணை வட்டாட்சியர் தேவகி, தற்காலிக கணினி பணியாளர் டெல்பி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி