மயிலாடுதுறை: சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கண்டியூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் முருகதாஸ் (23). இவர், 15 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பின்னர், அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான சிறுமியை, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். 

அங்கு, சிறுமியின் வயதை உறுதி செய்த மருத்துவர்கள், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சைல்ட் லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, முருகதாசை கைது செய்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி