சீா்காழி: முதலை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

சீர்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த குளத்தில் கடந்த சில வாரங்களாக முதலை நடமாட்டம் தென்படுகிறது. பகல் பொழுதில் முதலை கரையில் படுத்துகிடப்பதும், இரவு நேரங்களில் அருகில் உள்ள பகுதிக்கு வந்து செல்வதுமாக உள்ளது. இந்த குளத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் தெருக்களில் விளையாடி வரும் நிலையிலும், பொதுமக்கள், கால்நடைகள் குளத்தை பயன்படுத்திவரும் நிலையில், குளத்தில் முதலை இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறை உடனடியாக முதலையை பிடித்து, வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி