மயிலாடுதுறை: 'விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் இணைய அழைப்பு

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை, 'விவசாயிகள் பெரும் பதிவேடு' திட்டத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 'விவசாயிகள் பெரும் பதிவேடு' திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இணைவதன் மூலம் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற இயலும். 

இத்திட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் அவர்களது ஒப்புதலோடு சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று தனித்துவமான அடையாள எண் வழங்கப்படவுள்ளது. இப்பெரும் பதிவேடு பதிவேற்றம் பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திட, மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் அரசு வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் கிராமங்கள் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், மயிலாடுதுறை-9700414046, குத்தாலம்- 9894548257, செம்பனார்கோயில்-6369895439, சீர்காழி-9080068772, கொள்ளிடம்-9150600585 என்ற கைப்பேசியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி