நாகை: கடலில் கவிழ்ந்த படகு..சடலமாக கரை ஒதுங்கிய மீனவர்

நாகை அருகே பைபர் படகு கவிழ்ந்து மாயமான மீனவர் வேளாங்கண்ணி கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார். 

நாகை மாவட்டம் கல்லார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவர் உள்ளிட்ட அதே ஊரைச் சேர்ந்த சித்தானந்தம் ரத்தினசாமி என மூன்று மீனவர்கள் நேற்று (டிசம்பர் 31) அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 

கடலில் மீன் பிடித்து விட்டு நாகை துறைமுகம் நோக்கி கரை திரும்பிய மீனவர்களின் பைபர் படகு, கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக எழுந்த ராட்சஷ அலையில் சிக்கி நிலைதடுமாறியது. இதில் நிலைகுலைந்த மீனவர்கள் மூவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் கல்லார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சித்தானந்தம் முகத்துவாரா கடலில் மூழ்கி மாயமானார். 

சகமீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவினர் போலீசார் அப்பகுதியில் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து கடலோர காவல் குழுவினர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அவரது உடல் வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. 

உடலைக் கைப்பற்றிய கடலோர காவல் குழுவினர் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான கல்லார் கிராம மீனவர் உயிரிழந்த சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி