நாகை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

காத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்காமலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய திட்ட நிதியான 4034 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் நிறுத்திவைத்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செய்த வேலைக்கு ஊதியம் வழங்க கோரி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, கீழையூர், திருமருகல் உள்ளாட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை பெண் பணியாளர்கள் பேரணியாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 100 நாள் திட்ட நிதியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி