மதுரை, செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (28), கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் பிணையில் வெளிவந்த அவர், திங்கள்கிழமை மாலை மீனாட்சிபுரம் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. செல்லூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.