மதுரை அருகே சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு, புதுத்தெரு, நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு செல்லும் கிருதுமால் நதியைக் கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் சாக்கடைநீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் புகுந்தது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் முற்றிலுமாக கழிவுநீர் சூழ்ந்துள்ளது. 40 வருடங்களாக இயங்கி வரும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று கிருதுமால் நதி கழிவுநீர் பள்ளிக்குள் சென்ற நிலையில் அதுகுறித்து பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று (ஜூன் 16) திங்கட்கிழமை என்பதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை. இதனால் கோயில் முன்பாக அமர வைக்கப்பட்டனர். மாற்று இடம் கூட இல்லாமல் பள்ளி மாணவர்களை சாலையில் அமர வைத்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் அங்கு இருந்த சமுதாயக் கூட்டத்தை தூய்மைப்படுத்தி தற்போது மாணவர்களை அங்கு வைத்துள்ளனர்.