மதுரை: "அரோகரா" கோஷத்துடன் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக விழா (வசந்த உற்சவம்) கடந்த 31ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 9) வைகாசி விசாக பால் குடம் விழா நடைபெற்றது. வைகாசி விசாகத்தை ஒட்டி, இன்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் துவங்கினர். உற்சவர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கோயில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். 

அங்கு காலை 5:30 மணி அளவில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களைக் கொண்டு சண்முக வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அங்கு காலை முதல் மதியம் வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி அழகு குத்தி பல்வேறு வகையில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். 

விழாவில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருது நகர், காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை மற்றும் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி