மதுரை: வணிகா்கள் கடையடைப்பு - ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிப்பு

மத்திய அரசு கடந்த அக். 10-ஆம் தேதி முதல் கட்டட வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துவதைக் கட்டாயமாக்கும் ஆர்.சி.எம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டம் சிறு வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (நவ. 29) ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்கு மதுரையில் உள்ள 60-க்கும் அதிகமான தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, ஆதரவு தெரிவித்த சங்கங்கள் நேற்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக, மதுரை கீழமாசி வீதி, கீழவெளி வீதி, கீழ ஆவணி மூல வீதிகளில் உள்ள மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கடையடைப்பு காரணமாக பெரும்பாலான வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு: இதைத் தவிர, கட்டட வாடகைக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கத்தினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ. 500 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிப்புக்குள்ளானதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி