இதனையடுத்து கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினர். இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துச்செல்வது தனிச்சிறப்பாகும்.
சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியை தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும் இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர்.