ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில், "ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வழியாக பதிவு நடைபெறும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரில் காளைகளை அறிவிக்க கூடாது, காளை உரிமையாளரின் பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும்" என கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "காளைகளின் கொம்பின் மீது ரப்பர் குப்பிகள் வைக்க கால்நடைத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இந்த முறை நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஒவ்வொரு காளைகளின் கொம்பும் வேறுவிதமாக இருக்கும். ஆகவே, ரப்பர் குப்பிகள் வைக்க இயலாது. காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் வைப்பதற்கு பதிலாக மாற்று வழியை கால்நடைத்துறை அறிவிக்க வேண்டும்" என கூறினார்.