மதுரை: லாட்டரி விற்பனை.. சிறப்பு பட்டாலியன் காவலர் உட்பட 3 பேர் கைது

மதுரை மாநகர் பீபிகுளத்தைச் சேர்ந்த பாலாஜி (52) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது ஆன்லைன் மூலமாக கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பாலாஜிக்கு வாட்ஸ் ஆப் மூலமாக கேரளா லாட்டரி எண்களை மதுரையை சேர்ந்த ரஹ்மத்துல்லா, கனி ஆகிய இருவரும் அனுப்பிவைத்த நிலையில் அதை பாலாஜி தனது நண்பர்களான மதுரைவீரன், பிரகாஷ் ஆகியோருக்கும் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிவைத்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்ததாக பாலாஜி, கனி, மதுரைவீரன், ரஹ்மத்துல்லா, பிரகாஷ் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலாஜியையும், மதுரை புதுநகர் பகுதியைச் சேர்ந்த கனி(32) ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவர் மதுரை 6ஆவது சிறப்புப் பட்டாலியன் படையில் காவலராக உள்ளார். காவலர் பிரகாஷ் 3 ஆண்டுகளுக்கு முன் இதே பிரச்சினைக்காகவும், கிளப் மற்றும் விடுதிகளில் நடந்த சூதாட்டங்களுக்காகவும் மாமூல் வசூலித்து வந்த புகாரிலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சேர்ந்த நிலையில் லாட்டரியை தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி